காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் தேசிய செயலாளர் சஞ்சய் தத் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போ பேசிய அவர், "குடியரசு தலைவர் பங்கேற்ற பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் மாணவி ரபிஹா வெளியேற்றப்பட்டது மிகவும் கண்டிக்கத்தக்கது. குடியரசுத் தலைவர் வருகை விவகாரத்தில் கிரண்பேடி அதிகளவில் தலையீடு செய்தார். இதனால் மாணவியை வெளியேற்றியதில் துணைநிலை ஆளுநர் கிரண்பேடிக்கு தொடர்பு இருக்கிறதா? என விசாரிக்க வேண்டும்.
பாஜகவின் அறிவிக்கப்படாத தலைவராக மாறிவிட்ட கிரண்பேடி, புதுச்சேரி ஆளுநர் மாளிகையை பாஜக அலுவலகமாக மாற்றிவிட்டார். மாணவிக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஹிஜாப் அணிந்ததால் அனுமதிக்கவில்லையா? அதற்கான காரணங்கள் என்ன? குடியரசுத் தலைவர் இதுகுறித்த கண்டனம் தெரிவித்திருக்க வேண்டும். அந்த மாணவி ராஷ்ட்ரபதி பவனுக்கு அழைக்கப்பட்டிருக்க வேண்டும்.
நாடு முழுவதும் இந்த சம்பவம் தெரிந்துள்ள நிலையில் இந்திய குடியரசுத் தலைவரின் நிலைப்பாடு என்ன? இந்த அநீதிக்கு மத்திய அரசு என்ன பதில் சொல்லப்போகிறது. உடை, மதத்தின் பேரில் மாணவர்களை பிரிக்க அரசு முயற்சிக்கிறதா? அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டும். மாணவி ரபிஹாவை அழைத்து காங்கிரஸ் பாராட்டும்" என்றார்.
இதையும் படிங்க: நீட் தேர்விற்கான விண்ணப்பக் கையேடு முதல் முறையாக தமிழில் வெளியீடு!