குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தீனதயாள் உபாத்யாயா பெட்ரோலியம் பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் பேசிய அம்பானி, அமித்ஷாவின் ஆற்றலும் கவனமும் வியக்க வைப்பதாகவும் அவரை போன்ற ஒரு எழுச்சியூட்டும் தலைவர் இருப்பது குஜராத்துக்கு மட்டுமல்லாது இந்தியாவுக்கே பெருமை என்றும் கூறினார். கர்மயோகியாகவும் இரும்பு மனிதராக அமித்ஷாவை விளங்குவதாகவும் புகழ்ந்து பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர், இந்தியா விரைவில் உலகின் முன்னணி டிஜிட்டல் சமூகமாக மாறும் என்றும் இரண்டு ஆண்டுகளுக்குள் மொபைல் தரவு பயன்பாட்டில் இந்தியா தலைமைப் பதவியை எட்டியுள்ளதாகவும் கூறினார்.
பின்னர் பேசிய அமித்ஷா, இந்தியாவில் கடந்த 2014-ஆம் ஆண்டு வரை பொருளாதாரத்தை காக்க பெரிய அளவில் முயற்சிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் தற்போது உலகில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக மாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.