ஆந்திரப் பிரதேச மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள ஆர்.ஆர்.வெங்கடேஷ் பட்டினம் என்ற கிராமத்தில் இயங்கி வந்த எல்.ஜி., பாலிமர்ஸ் தனியார் ரசாயனத் தொழிற்சாலையில், நேற்று அதிகாலை 2 மணியளவில் திடீரென கசிவு ஏற்பட்டது. எதிர்பாராத விதமாக, ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட இந்த கோர ஸ்டைரீன் விஷ வாயு கசிவின் காரணமாக, சுற்று வட்டார கிராமங்களில் வசிக்கும் 2000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறிப்பாக பெரியவர்கள், குழந்தைகள் மிக கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். சாலையில் நடந்து சென்றவர்கள், திடீரென மயக்கம் போட்டு விழுந்தனர். வாயுக் கசிவினால் ஆடு மாடுகள் உள்ளிட்ட செல்லப் பிராணிகளின் பரிதாபமாக உயிரிழந்துள்ளன. இந்த ஸ்டைரீன் விஷ வாயுக் கசிவினால், இதுவரை ஒரு சிறுமி உள்பட 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இந்த விபத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஆயிரத்திற்கும், செயற்கை சுவாச கருவியின் உதவியோடு சிகிச்சைப் பெற்று வருவதாகவும் தெரிவித்த அலுவலர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

ஸ்டைரீன் விஷ வாயுவின் நச்சுத் தன்மையைக் கட்டுப்படுத்த பி.டி.பி.சி (பாரா- மூன்றாம் நிலை பியூட்டில் கேடகோல்) ரசாயனம், சரக்கு விமானம் மூலம் ஆந்திரப் பிரதேசம் வந்தடைந்தது. மேலும், மாநில அரசின் மீட்புப் பணிகளுக்கு உதவ தேசியப் பேரிடர் மீட்புப் பணி படை (என்.டி.ஆர்.எஃப்), தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் வல்லுநர்கள் விசாகப்பட்டினம் வந்தடைந்துள்ளனர்.
இது தொடர்பாக மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலர் கூறுகையில்,“கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில் தொழிற்சாலைகள் இயங்குவதற்கு, அரசு தளர்வு அளித்ததைத் அடுத்து, இந்த நிறுவனம் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, அதிகாலை 3 மணிக்கு விஷ வாயு கசிவு ஏற்பட்டுள்ளது. கொள்கலனைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது அவசியம். இது, தற்போது கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஸ்டைரீன் விஷ வாயுவை நடுநிலைப்படுத்தும் செயல்முறை தொடர்ந்து நடந்துவருகிறது. நிலைமை கட்டுப்பாட்டில் உள்ளது.” என்றார்.
இதையும் படிங்க : விசாகப்பட்டினம் விஷவாயு கசிவு: உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிப்பு