கேரள பண மோசடி வழக்கு, தங்கம் கடத்தல் வழக்கில் தொடர்புடைய அனைத்துக் குற்றவாளிகளையும் ஒன்றாக விசாரிக்க அமலாக்கத் துறை திட்டமிட்டுள்ளது.
கேரளாவில் ஜூலை 5ஆம் தேதி பதினைந்து கோடி ரூபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அலுவலர்கள் கைப்பற்றினர். இந்தக் கடத்தல் சம்பந்தமாக கேரள முதலமைச்சரின் மாநில தகவல் தொழில்நுட்ப முன்னாள் செயலர் சிவசங்கர் கைதுசெய்யப்பட்டார்.
இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட சிவசங்கரிடம் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரணை நடைபெற்றது. சிவசங்கரை கைதுசெய்த அமலாக்கத் துறை, அவரை அக். 28ஆம் தேதி நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிபெற்றது. நீதிமன்றம், சிவசங்கரிடம் காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரை மட்டுமே விசாரிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது.
இந்த விசாரணையில் புதிய முன்னேற்றம், வெளிப்பாடுகள் குறித்து அமலாக்கத் துறை பரிசீலித்துவருகிறது. இதற்கிடையில், இரண்டாவது நாளாக சிவசங்கரிடம் விசாரணை தொடர்ந்தது.
இதையடுத்து நேற்று (அக். 30) விசாரணைக்குப் பின்பு சிவசங்கரின் முதுகுவலி காரணமாக, அவர் ஆயுர்வேத மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இது குறித்து விசாரணை அமைப்பு கூறுகையில், "பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட சிவசங்கருக்கு எதிராக ஆதாரங்களைத் திரட்ட முயற்சி செய்வதாகத் தெரிவித்தது.
எனினும், சிவசங்கர் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத் துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நீதிமன்றக் காவலில் உள்ள சிவசங்கருடன் சேர்த்து சரித், ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோரை நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளது. இந்த மனு எர்ணாகுளம் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வரும் திங்கள்கிழமை விசாரணைக்கு வரவுள்ளது.