கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த திங்கள்கிழமை சீனாவுடன் மோதல் வெடித்ததில் இந்திய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 20 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த சம்பவம் நாட்டு மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள சூழலில், சீனப் பொருட்களை புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் நாடு முழுவதும் வலுத்து வருகிறது.
ஆனால், அரசு திட்டங்களிலிருந்து சீன நிறுவனங்களை முற்றிலுமாகப் புறக்கணிப்பதே சீனாவிற்கு பாடம் புகட்டுவதற்கான சிறந்த வழி என முன்னாள் வர்த்தக மற்றும் தொழில்துறைச் செயலர் அஜய் துவா தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஈடிவி பாரத் துணை தலைமை ஆசிரியர் கிஷ்ணானந்த் திரிபாதியிடம் பேசிய அஜய் துவா, "சீன நிறுவனங்களுக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும் என்றால் ரயில்வே, தொலைத்தொடர்பு, மின்சாரம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் அவற்றை அனுமதிக்கக் கூடாது.
இத்துறைகள் தொடர்பான ஏற்றுமதியை உலக வர்த்தக அமைப்பின் விதிகள் எந்த வகையிலும் பாதிக்காது. அரசாங்கம் அதன் விருப்பத்துக்கேற்ப செயல்படலாம்.
சீன தொலைத்தொடர்பு கருவிகளை வாங்க வேண்டாம் என பிஎஸ்என்எல் நிறுவனத்திடம் அரசாங்கம் கூறலாம். ரயில்வேத் திட்டங்களிலிருந்து சீன நிறுவனங்களைப் புறக்கணிக்கலாம்.
ஆனால், உலக வங்கியோ, ஆசிய வளர்ச்சி வங்கியோ அரசு திட்டங்களுக்கு நிதியுதவி அளிக்கும்பட்சத்தில் நாம் இவை குறித்து யோசிக்க வேண்டிய சூழல் உருவாகும்" எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க : அமைதி பேச்சுவார்த்தை மூலம் இந்தியா - சீனா இடையே சுமுகத் தீர்வு: நேபாளம் நம்பிக்கை