ஐஐடி ஜோத்பூர், நாட்டின் முதல் மேம்பட்ட ஒளிச்சேர்க்கை ஆக்ஸிஜனேற்ற கன்வேயர் சிஸ்டம் கருவியை (advanced photocatalytic oxidation conveyor system machine) உருவாக்கியுள்ளது. இந்தக் கருவியின் வணிக உற்பத்தி விரைவில் தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் கீழ் எம்.எஸ்.எம்.இ இன்டஸ்ட்ரீஸுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டுள்ளது. இந்த கருவி விரைவில் சந்தையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
இது குறித்து ஐஐடி ஜோத்பூர் கூறுகையில், "இந்த கருவி உணவு பாக்கெட்டுகள், புத்தகங்கள், மொபைல் போன்கள், மடிக்கணினிகள், கேரி பைகள், கொரியர் பார்சல்களின் மேற்பரப்புகளில் உள்ள கிருமியை நீக்கம் செய்கின்றன. இதை தோல் பொருள்கள், தடிமனான மேற்பரப்புகளிலும் பயன்படுத்தலாம். ஐ.ஐ.டி யின் இயற்பியல், எலக்ட்ரிக்கல் என்ஜினியரிங், மெக்கானிக்கல் என்ஜினியரிங், பயோ சயின்ஸ் மற்றும் என்ஜினியரிங் ஆகிய நான்கு துறைகளின் மாணவர்களால் இந்த கருவி உருவாக்கப்பட்டுள்ளது. தொற்றுநோய் காலக்கட்டத்தில் மக்கள் சுத்திகரிப்பு தயாரிப்புகளை அதிகம் நம்பியுள்ளதால், புதிய தொழில்நுட்பம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இந்தச் சாதனம் UV-C ஒளியை பயன்படுத்துகிறது. இந்தத் தொழில்நுட்பத்தை விமான நிலையங்கள், கல்லூரிகள், மால்கள், வணிக கட்டடங்கள் மற்றும் சுகாதார வசதிகள் உள்ளிட்ட பொது இடங்களில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகிறது. புதிய ஸ்டெர்லைசேஷன் முறையை எய்ம்ஸ் ஜோத்பூர், ஜெய்ப்பூரின் பிர்லா அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் சோதனை செய்து சான்றிதழ் வழங்கியுள்ளது.