பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களில் ஏற்பட்டுள்ள முறைகேடுகளை விசாரிக்க ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி 10 பேர் கொண்ட விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளார். இந்த விசாரணைக் குழுத் தலைவராக உளவுத்துறை டி.ஐ.ஜி. கொல்லி ரகுராம் ரெட்டி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஆந்திர மாநிலம், பிரிக்கப்பட்டபின் 2014ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு பதவி வகித்தபோது, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஜெகன் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்.
இந்த முறைகேடுகள் விரைவில் கண்டறியப்பட்டு தக்க நடவடிக்கைகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின்போது தெரிவித்திருந்தார்.
இதையடுத்து 10 பேர் கொண்ட விசாரணைக் குழுவை, தற்போது ஜெகன் அமைத்துள்ளார். வழக்கு விசாரணைக்காக எந்தவொரு அதிகாரிகள் மற்றும் தனி நபர்களையும் அணுகும் அதிகாரம் இந்த விசாரணைக்குழுவுக்கு உண்டு.
மேலும் தேவைப்படும்பட்சத்தில் இந்தக்குழு மத்திய, மாநில புலனாய்வு அமைப்புகளையும் தொடர்பு கொள்ளும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது.
முன்னதாக, பிரிக்கப்பட்ட ஆந்திர மாநிலத்தின் தலைநகராக அமராவதியை உருவாக்கும் திட்டத்தில் தனக்கு வேண்டியவர்கள், பினாமிகளுக்கு சந்திரபாபு நாயுடு முறைகேடாக ஒப்பந்தங்கள் மேற்கொண்டார் என ஜெகன் மோகன் குற்றம்சாட்டிவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ரோபோக்களை பயன்படுத்தி மக்களை பாதுகாக்கும் சீன அரசு!