இந்திய-சீன எல்லைப் பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன், இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில், இந்திய வீரர்கள் 20 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து, சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவந்தன.
ஆனால், கடந்த ஒரு மாதமாகவே எல்லைப் பதற்றங்களைத் தணிப்பதற்கான பேச்சுவார்த்தையில் இந்தியாவும் சீனாவும் ஈடுபட்டுவருகின்றன. கடந்த ஜுன் ஆறாம் தேதி நடைபெற்ற இரு நாட்டு ராணுவத் தளபதிகளுக்கு இடையேயான முதல்கட்ட பேச்சுவார்த்தையின்போது, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே சீனா ஆக்கிரமித்துள்ள இந்தியப் பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு இந்திய ராணுவத் தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டது.
இதற்கு சீனத் தரப்பில் எந்தப் பதிலும் அளிக்கப்படவில்லை. மேலும் ஆக்கிரமிப்புப் பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ள 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ராணுவத்தினரைத் திரும்பப் பெறுவதாகவும் கூறவில்லை. மீண்டும் இரு நாட்டு ராணுவத் தளபதிகள் இடையே ஜூன் 22ஆம் தேதியன்று நடைபெற்ற இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தையின்போது, கிழக்கு லடாக் பகுதியிலிருந்து வெளியேற இரு தரப்பினரும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்பட்டது.
இந்த இரண்டு கட்ட பேச்சுவார்த்தைகளும் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு அருகே சீனப் பகுதியில் உள்ள மோல்டோவில் நடைபெற்றது. இந்நிலையில், இரு நாட்டு ராணுவத் துணைத் தலைமைத் தளபதிகள் இன்று மூன்றாம் கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.