இந்தியா-ஜப்பான் ஆகிய இரு நாடுகளிடையே வழங்கல் மற்றும் சேவைகளை பரிமாறிக்கொள்வது தொர்பாக ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்திய ஆயுதப்படைகள் மற்றும் ஜப்பானின் தற்காப்புப்படைகள் இந்த ஒப்பந்தத்தை செய்துள்ளன. இதில், பாதுகாப்புச் செயலாளர் டாக்டர் அஜய் குமார் மற்றும் ஜப்பான் தூதர் சுசுகி சடோஷி ஆகியோர் கையெழுத்திட்டனர்.
இதுதொடர்பாக இந்தியப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த ஒப்பந்தம் இருதரப்பு பயிற்சி நடவடிக்கைகள், அமைதி காக்கும் நடவடிக்கைகள், மனிதாபிமான சர்வதேச நிவாரணம் மற்றும் பரஸ்பரம், ஒப்புக்கொள்ளப்பட்ட பிற நடவடிக்கைகளில் ஈடுபடும்போது, இந்தியா மற்றும் ஜப்பானின் ஆயுதப்படைகளுக்கு இடையில் நெருக்கமான ஒத்துழைப்புக்கான கட்டமைப்பை நிறுவுகிறது.
இது இந்திய ஆயுதப்படைக்கும் ஜப்பானுக்கும் இடையிலான செயல்பாட்டை அதிகரிக்கும். இதன்மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான சிறப்பு மூலோபாய மற்றும் உலகளாவிய கூட்டுறவின்கீழ், இருதரப்பு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் அதிகரிக்கும்" என்று தெரிவித்துள்ளது.