மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலை அடுத்த சாகர் பகுதியைச் சேர்ந்த 75 வயது ஷியாம் லால் யாதவ் என்பவருக்கு கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்து நேர்ந்துள்ளது. அதில் அவர் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. காயம் குணமடைந்த பிறகு அந்த இடத்தில் நான்கு அங்குல அளவிற்கு கொம்பை போன்று வளர தொடங்கியுள்ளது.
இதனால், சாலைகளிலும் பொது இடங்களிலும் அந்த கொம்பை வைத்து கொண்டு அவர் சகஜமாக செல்வதற்கு மிகவும் அசவுகரியம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தலைமுடி திருத்தகத்தில், முடி திருத்துபவர் மூலம் பலமுறை தலையில் முளைத்திருந்த அந்த கொம்பை வெட்டி எடுத்துள்ளார். இருப்பினும் அது வெட்ட வெட்ட முளைத்துக் கொண்டே இருந்ததால், பின் அறுவை சிகிச்சை மூலம் அதனை அகற்ற பல மருத்துவர்கள் உதவியை நாடியுள்ளார், அவை எதுவும் கை கொடுக்காததால் கடந்த ஐந்து ஆண்டுகாளக சிரமப்பட்டு வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் சொந்த ஊரான சாகர் பகுதியிலே இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில், அவருக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையில் அந்த நான்கு அங்குல கொம்பு வெற்றிகரமாக அகற்றப்பட்டது. பின்னர் மருத்துவர்கள் அந்த இடத்தை பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மூலம் சரி செய்தனர். ஐந்தாண்டுகளாக தலை மீது கொம்பு வைத்து கொண்டு மன வேதனையில் வாழ்ந்து வந்த அந்த முதியவர் தற்போது அறுவை சிகிச்சைக்குப் பின் பெரும் நிம்மதியை எட்டியுள்ளார்.