நிமோனியா, இதய நோய், ரத்த உறைதல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டு ஒருவர் உயிரிழந்திருந்தால், கரோனா வைரஸ் நோய் காரணமாக இந்த உயிரிழப்பு நிகழ்ந்ததாக மருத்துவர்கள் பதிவு செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது. பொது சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை கருத்தில் கொண்டு பெருந்தொற்று காலத்தில் நிகழும் உயிரிழப்புகளை முறையாக பதிவு செய்ய வேண்டும் என இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில், "கோவிட் - 19 ஒரு புது விதமான நோய். இதனால் பல நாடுகளில் பல்வேறு தரப்பினர் பாதிக்கப்பட்டுள்ளனர். பொது சுகாதாரத்தில் கரோனா ஏற்படுத்திய தாக்கம் குறித்து பதிவு செய்ய வலுவான தரவுகள் தேவை. உயிரிழப்பு குறித்த அடிப்படை காரணிகள் மருத்துவ பரிசோதனையில் உறுதிப்படுத்தவில்லை என்றபோதிலும் இந்த உயிரிழப்பு கரோனாவால் நிகழ்ந்திருக்கலாம் என பதிவு செய்ய வேண்டும்.
கரோனா அறிகுறிகள் தென்பட்ட ஒருவர் உயிரிழந்து அவரது மருத்துவ பரிசோதனை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டிருந்தால், அந்த மரணத்தை சந்தேகத்திற்குரிய கரோனா மரணம் என பதிவு செய்ய வேண்டும். கரோனா அறிகுறிகள் தென்பட்டு மருத்துவ பரிசோதனையில் அவர் நோயால் பாதிக்கப்படவில்லை என்பது உறுதியானால், தொற்றுநோயியல் கண்டறியப்பட்ட கோவிட் - 19 என குறிப்பிட வேண்டும். மக்களை பாதுகாக்க மாவட்ட, மாநில அளவிலான தரவுகள் தேவை.