கரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக உலகம் முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், கச்சா எண்ணெயின் தேவை குறைந்தது. இதனால் அவற்றின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியாவில் மார்ச் 16ஆம் தேதி முதல் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை குறைப்பு நிறுத்தப்பட்டது.
தற்போது ஊரடங்கு படிப்படியாக குறைந்துள்ளதால், பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளது. இதனால் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்துவருகிறது. இதனைக் காரணம் காட்டி, எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தி வருகின்றன.
தொடர்ந்து 21 நாள்களாக பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை அதிகரித்தது பொதுமக்களிடையே பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இந்நிலையில் 21 நாள்களுக்கு பிறகும், பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் எவ்வித மாற்றமும் இல்லாமல் காணப்படுகிறது.
நேற்று தலைநகர் டெல்லியில் பெட்ரோலின் விலை 25 பைசாவும், டீசலின் விலை 21 பைசாவும் அதிகரித்தது. இதனால் பெட்ரோல் ரூ.80.38 பைசாவுக்கும், டீசல் விலை ரூ.80.40 பைசாவுக்கும் விற்கப்பட்டது. இன்று பெட்ரோல் மற்றும் டீசலின் விலையில் மாற்றம் இல்லாததால், அதே விலையே இன்றும் காணப்படுகிறது.
கச்சா எண்ணெய் மீதான விற்பனை மற்றும் மதிப்புக் கூட்டு வரி ஒவ்வொரு மாநிலத்திற்கும் மாற்றமடையும் என்பதால் மற்ற மாநிலங்களில் டீசலை விட பெட்ரோல் விலை அதிகமாக காணப்படுகிறது.
சென்னையில் பெட்ரோலின் விலை லிட்டருக்கு ரூ.83.59 பைசாவாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.61 பைசாவாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பிரதமருக்கு நாராயணசாமி கடிதம்