சிலைக் கடத்தல் வழக்குகளை விசாரித்து வந்த நீதிபதி மகாதேவன் அமர்வை கலைத்து உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தஹில் ரமாணி உத்தரவிட்டார். இந்நிலையில் அவர் மேகாலயா உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இதற்கிடையே சென்னை புறநகரில் ரூ.3 கோடியே 18 லட்சம் ரூபாய்க்கு அடுக்குமாடி குடியிருப்புகளில் இரண்டு வீடுகளை தஹில் ரமாணி வாங்கியுள்ளார். தஹில் ரமாணி உயர் நீதிமன்ற பதவியில் இருந்து விலகிய பின்னர் மத்திய உளவுத்துறை 5 பக்க அறிக்கையை உச்ச நீதிமன்றத்திற்கு அனுப்பியுள்ளதாக தெரிகிறது.
அதில் தஹில் ரமாணி அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்கியது குறித்தும், சிலை கடத்தல் வழக்குகளுக்கான சிறப்பு அமர்வை அவர் தள்ளுபடி செய்தது குறித்தும் தெரிவிக்கப்பட்டிருப்பதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.