ஏழாம் மற்றும் கடைசி கட்ட வாக்குபதிவு மே 19 ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் ராகுல்காந்தி இன்று செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது அவர் கூறுகையில், "மே.23ஆம் தேதி மக்கள் முடிவு செய்வார்கள். மக்களின் மனநிலைபடி நாங்கள் செயல்படுவோம். தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தலில் ஒரு தலைபட்சமாக செயல்பட்டு வருகிறது. தேர்தல் பரப்புரையில் மோடி ஈடுபடும்படி தேர்தல் அட்டவணை தயார் செய்யப்பட்டது. பாஜகவிடம் பணம் உள்ளது. ஆனால் எங்களிடம்தான் உண்மை உள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது செய்தியாளர் சந்திப்பை நடத்தாமல் முதன் முறையாக மோடி செய்தியாளரை சந்திப்பை நடத்துவதற்கான காரணம் என்ன?. ரஃபேல் விவகாரத்தில் நேருக்குநேர் விவாதம் செய்ய நான் மோடியை அழைத்தேன். ஆனால் இதுவரை அவர் விவாதம் செய்ய வரவில்லை. எங்களின் முதல் குறிக்கோள் பாஜகவை தோற்கடிப்பது. இரண்டாவது குறிக்கோள் காங்கிரஸ் கொள்கையை மக்களிடம் கொண்டுபோய் சேர்ப்பது. மூன்றாவது குறிக்கோள் சட்டப்பேரவை தொகுதிகளில் வெற்றி பெறுவது" என்றார்.
இந்த செய்தியாளர் சந்திப்பின்போது மோடியும் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.