புதுச்சேரி பாகூர் பகுதியில் உள்ள பாரதி அரசு மேல்நிலைப் பள்ளியில் சில வாரங்களுக்கு முன்பு மாணவர்கள் இரு பிரிவுகளாக மோதிக்கொண்டனர். இது தொடர்பாக இரு தரப்பினரையும் அழைத்து சமரசம் பேசிய காவல் துறையினர், மூன்று பேர் மீது மட்டும் காவல்துறை வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது.
அதன்பிறகு அப்பள்ளியில் பிரச்னைகள் தீர்ந்த நிலையில், நேற்று திடீரென அங்கு பணியாற்றிய மூன்று ஆசிரியர்கள் கல்வித்துறை அதிரடியாக இடமாற்றம் செய்தது. இதைக் கேள்விப்பட்ட சில அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று கல்வித்துறை அலுவலகம் முன்பு திரண்டனர். அங்கு பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவடாவை இதுதொடர்பாக சந்தித்து பேச காத்திருந்தனர். ஆனால் அவர்கள் இயக்குநரை சந்திக்க அவர்களுக்கு அலுவலகம் அனுமதி மறுத்துவிட்டது.
இதனால் ஆத்திரமடைந்த 20க்கும் மேற்பட்டோர் கல்வித்துறை நுழைவு வாயில் முன்பு தரையில் அமர்ந்து முற்றுகையில் ஈடுபட்டனர். இதையடுத்து தகவல் கிடைத்து விரைந்துவந்த உருளையன்பேட்டை காவல் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து இயக்குநரை சந்திக்க ஏற்பாடு செய்து தருவதாக உறுதி அளிக்கப்பட்டதையடுத்து முற்றுகை போராட்டம் கைவிடப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க: பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை - சுகாதாரத் துறை ஊழியர்கள் ஊர்வலம்