தலைநகர் டெல்லியில் கடந்த பிப்ரவரி 24, 25ஆம் ஆகிய தேதிகளில் நடைபெற்ற வன்முறை நாட்டையே உலுக்கியது. 53 உயிர்களைக் காவு வாங்கிய இந்தக் கலவரத்தால் ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்து தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கின்றனர். கலவரத்தால் பாதிக்கப்பட்டுவர்களுக்கான மறுவாழ்வுக்கான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுவருகின்றன.
இந்நிலையில் வன்முறை குறித்த முக்கிய விவரங்களை நேற்று டெல்லி காவல் துறை ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ளது. அதன்படி, டெல்லி காவல் துறை இதுவரை ஆயிரத்து 983 நபர்களைக் கைதுசெய்துள்ளது. 683 பேர் மீது முதல் தகவல் அறிக்கைத் தாக்கல்செய்யப்பட்டுள்ளது. மேலும், 48 பேர் ஆயுத தடுப்புச் சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி வன்முறை தொடர்பாக இதுவரை காவல் துறை சார்பில் 251 ஆலோசனைக் கூட்டம் நடத்தியுள்ளதாகவும், குற்றப்பிரிவின்கீழ் இரண்டு சிறப்பு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல் துறையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: கொரோனா வதந்திகளை நம்ப வேண்டாம் - மக்களுக்கு மோடி வேண்டுகோள்