நேற்று பிற்பகல் ஜல்னாவின் மகாராஷ்டிரா தொழில்துறை மேம்பாட்டுக் கழகத்தின் தொழிற்பேட்டை பகுதியில் உள்ள ஓம் சாய்ராம் ஸ்டீல் அலாய்ஸில் நிறுவனத்தில் கொதிகலன் வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து நடந்தபோது தொழிற்சாலையில் 25 தொழிலாளர்கள் பணிபுரிந்தனர். வழக்கம் போல தங்களது பணிகளை செய்து வந்தபோது எதிர்பாராத விதமாக தொழிற்சாலையில் கொதிகலன் வெடித்திருக்கிறது.
இந்த வெடி விபத்து நிகழ்ந்தபோது, அதில் சம்பவ இடத்திலேயே நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தகவலறிந்து மீட்பு பணிகளுக்காக விபத்து ஏற்பட்ட பகுதிக்கு சென்ற 20க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறையினர், இடிபாடுகளை விரைந்து சரிசெய்து, அதற்குள் படுகாயமுற்ற நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஏழு பேரை பத்திரமாக மீட்டு அவசர சிகிச்சை வாகனத்தில் ஏற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
![Death toll in Jalna boiler explosion rises to six](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/6317176_27_6317176_1583490160657.png)
காயமடைந்தவர்கள் அவுரங்காபாத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்தில் படுகாயம் அடைந்து மேலும் இரண்டு தொழிலாளர்கள் உயிருக்கு போராடிவரும் நிலையில், தீவிர மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து தொடர்பாக சந்தஞ்சிரா காவல் நிலைய காவல் அலுவலர்கள் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து ஏற்பட்ட ஓம் சைராம் ஸ்டீல் நிறுவனம் மீது 304 , 337 , 338, 287 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை அலுவலர் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : டெல்லி கலவரம், எம்பிக்கள் இடைநீக்கம் - ராகுல் தலைமையில் காங்கிரஸ் போராட்டம்!