மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு, அண்மையில் குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது. இது முற்றிலும் இஸ்லாமியர்களுக்கு எதிரானது என்று நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. டெல்லி ஷகின் பாகினை தொடர்ந்து பெங்களூரு, சென்னை போன்ற நகரங்களிலும் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது.
அதுமட்டுமல்லாமல் கேரளா, புதுச்சேரி, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் இதற்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆனால், பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளோ இந்தச் சட்டத்திருத்தம் இந்திய குடிமக்களுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று கூறி வருகின்றன.
பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளில் மத ரீதியாக அடக்குமுறைகளை சந்தித்து இந்தியா வந்துள்ள இந்துக்களுக்கு குடியுரிமை அளிக்கவும், இந்தியாவில் ஊடுருவியுள்ள வெளிநாட்டு மத ரீதியிலான பயங்கரவாதிகளை கண்டறிந்து வெளியேற்றவும் இந்த முயற்சி எடுக்கப்பட்டது என்று பாஜக தரப்பில் விளக்கம் அளித்து வருகிறது. ஆனாலும், எதிர்க்கட்சிகள் இதனை ஏற்பதாக இல்லை.
தமிழ்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான திமுக, சிஏஏ கையெழுத்து இயக்கத்தை நடத்தி முடித்துள்ளது. சுமார், 2 கோடி கையெழுத்தை பெற்றுள்ள திமுக, அதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வசம் ஒப்படைக்கவுள்ளது. இதற்காக திமுக மக்களவைக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு தலைமையில், அதன் துணைத்தலைவர் கனிமொழி உட்பட 11 தமிழ்நாட்டு எம்பிக்கள் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்று அவரிடம் சிஏஏ-வுக்கு எதிரான தங்களது நிலைப்பாட்டை எடுத்துரைத்து இது தொடர்பான மனுவை இன்று பகல் 12.30 மணியளவில் அளிக்கவுள்ளனர்.
மேலும், திமுக நடத்திய கையெழுத்து இயக்கம் தொடர்பான விவரங்களும் குடியரசுத்தலைவரிடம் அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: அவர் கருத்துக்கெல்லாம் முக்கியத்தும் தரத் தேவையில்லை - ஐக்கிய ஜனதா தளம்