இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் 2018ஆம் ஆண்டு தகவலின்படி, இந்திய மாணவர்கள் ஏழு லட்சத்து 52 ஆயிரத்து 725 பேர் 90 வெளிநாடுகளில் கல்வி பயிலுகின்றனர். இவர்களில் இரண்டு லட்சத்து 83 ஆயிரத்து 250 மாணவர்கள் கரோனா அதிகளவு பாதிக்கப்பட்ட முதல் 15 நாடுகளில் வசிக்கின்றனர்.
இவர்களை விரைந்து மீட்க அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. சீனாவின் வூகான் மாகாணத்தில் முதலில் கரோனா (கோவிட்-19) வைரஸ் முதலில் அறியப்பட்டது. இந்த வைரஸ் தொற்றுக்கு அம்மாகாணத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் இத்தாலி, ஈரான் உள்ளிட்ட நாடுகளுக்கும் வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்தது. இந்த நாடுகளில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 425 பேர் உயிரிழந்து உள்ளனர். தற்போது இந்தியாவிலும் கரோனா வைரஸ் அறிகுறிகள் 151 பேரிடம் கண்டறியப்பட்டுள்ளன.
மகாராஷ்டிரா, தெலங்கானா, கேரளம் மற்றும் காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களில் பாதிப்பு அதிகமாக உள்ளது. இதையடுத்து நாடு முழுக்க அனைத்து மாநிலங்களிலும் பள்ளிகள், தேர்வுகள் வருகிற 31ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
மால்கள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி கூடங்கள், சினிமா அரங்குகள் உள்ளிட்ட பொதுமக்கள் கூடும் அனைத்து இடங்களும் பாதுகாப்பு கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மூடப்பட்டுள்ளன. உலகில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது. எட்டு ஆயிரத்துக்கும் அதிகமான உயிரிழப்புகள் நடந்துள்ளன என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : சிங்கப்பூரில் சிக்கித் தவிக்கும் 50 இந்திய மாணவர்கள்!