இந்தியாவில் மார்ச் 25ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த ஊரடங்கால் பல்வேறு மாநிலங்களில் சிக்கிய குடிபெயர்ந்த தொழிலாளர்கள் வேலை கிடைக்காமல் பல இன்னல்களை எதிர்கொண்டுவருகின்றனர். வேறுவழியின்றி சொந்த மாநிலங்களுக்கு நடந்து செல்லும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, உத்தரப் பிரதேச மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலுள்ள மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்குத் திரும்புவதில் பல பிரச்னைகளைச் சந்தித்துவருகின்றனர். காங்கிரஸ் அறிவித்த ஆயிரம் பேருந்துகளை முறையாக அம்மாநில அரசு பயன்படுத்தவில்லை என்பது ஒருபுறமிருக்க, மறுபுறம் குடிபெயர்ந்த தொழிலாளர்கள் சாலை விபத்துகளில் உயிரிழப்புகளும் தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், ஹரியானா மாநிலம் குருகிராமிலுள்ள தொழிற்சாலையில் பணிபுரிந்துவந்த 43 தொழிலாளர்கள் உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோவிற்கு லாரியில் சென்றுகொண்டிருந்தனர். ஆக்ரா-லக்னோ சாலையில் லாரி சென்றுகொண்டிருந்தபோது, எதிரில் வந்த லாரி மீது மோதி விபத்துக்குள்ளானது.
அருகிலிருந்த கிராம மக்கள், விபத்தில் சிக்கிய மக்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தச் சாலை விபத்தில் ஐந்து வயது குழந்தை ஒன்று உயிரிழந்தது. மேலும் 12 பேர் காயமடைந்தனர். அவர்களில் ஆறு பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
இதையும் படிங்க: வீடுகளை அடையும் முன் வெற்றுடல்களாகும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள்!