உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட அருண் ஜேட்லி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கடந்த மூன்று வாரங்களாக தொடர்ந்து இருதய மற்றும் நரம்பியல் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ஹர்ஷ் வரதன், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் அருண் ஜேட்லியை சந்தித்து தொடர்ந்து நலம் விசாரித்தனர்.
பிரதமர் மோடியின் பல்வேறு பிரச்னைகளையும் தீர்ப்பவராக இருந்த ஜேட்லி, கடந்த இரு ஆண்டுகளாகவே மருத்துவமனையில் அவ்வப்போது சிகிச்சை பெற்று வந்தார். இந்த ஆண்டுத் தொடக்கத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி இரண்டாவது முறையாக பதவி ஏற்றபோது, உடல்நிலை காரணமாக தான் அமைச்சர் பதவி ஏற்கவில்லை என்று மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். ஆனாலும் அமைச்சர் பொறுப்பேற்காமல் மற்ற உதவிகள் செய்ய முன்வந்திருந்தார்.
அவரது நாற்பது வருட அரசியல் வாழ்க்கையில், அவர் நிதியமைச்சராக இருந்தபோது மறைமுக வரி சீர்திருத்தங்களையும், புதிய திவால் சட்டத்தையும் அறிமுகப்படுத்தினார். அதேபோல் கார்ப்பரேட் விவகார இலாகாவை நிர்வகித்து வந்த ஜேட்லி, வரி ஏய்ப்பு செய்பவர்கள் பயன்படுத்தும் ஷெல் நிறுவனங்களை களையும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார்.
நீண்ட காலமாக நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், அவ்வப்போது சிகிச்சை மேற்கொண்டார். பின் 2018ஆம் ஆண்டு மே மாதம் சிறுநீரக பாதிப்பால் அவதிப்பட்ட அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்காவிலும் சிகிச்சை பெற்றார். அதன்பிறகு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று காலமானார்.