இந்தியாவிலேயே அதிக கரோனா பரிசோதனை மேற்கொண்ட மாநிலங்களில் ஆந்திரப் பிரதேசமும் ஒன்று. அம்மாநிலம் இதுவரை சுமார் 10 லட்சத்துக்கும் அதிகமான கரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளது. ஆந்திராவில் இதுவரை 20 ஆயிரம் பேர் கரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அம்மாநில அரசு பரிசோதனையில் முறைகேடு செய்துள்ளதாக முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் நடைபெற்ற நிகழ்வைக் காணொலியாகப் பகிர்ந்து இந்த விவகாரத்தை சந்திரபாபு நாயுடு கையிலெடுத்துள்ளார். அங்கு மக்களிடம் எந்தப் பரிசோதனை மாதிரியும் எடுக்காமலேயே பரிசோதனைச் செய்ததாக முடிவுகளை எஸ்எம்எஸ் மூலம் அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
”மக்களையும், மத்திய அரசையும் ஏமாற்றும் இந்த கிரிமினல் செயலில் ஆந்திர அரசு ஈடுபடுகிறது. பத்து லட்சம் கரோனா பரிசோதனை என ஆந்திர அரசு தெரிவித்துள்ளது ஒரு மோசடி, இதை மத்திய அரசு கண்காணிக்க வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: '6 ஆண்டுகளில் 9 பெண்கள்' - மேற்குவங்க ஆட்டோ சங்கருக்கு தூக்கு