டெல்லி சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி எட்டாம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான முடிவுகள் பிப்ரவரி 11ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. டெல்லி அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாஜகவுக்கு ஆதரவாக பிரதமர் நரேந்திர மோடி கிழக்கு டெல்லியில் நேற்று பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், "சீலாம்பூர், ஜாமியா நகர், ஷாஹின்பாக் உள்ளிட்ட பகுதிகளில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றன. இப்போராட்டங்கள் தற்செயலாக நடைபெறவில்லை. தேசிய நல்லிணக்கத்தைக் கெடுக்கும் விதமாக நடந்தது.
ஆம் ஆத்மி, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தவறான தகவல்களைப் பகிர்ந்து மக்களைத் தூண்டிவிடுகின்றன. அராஜக ஆட்சியைத் தவிர்க்க பாஜகவுக்கு வாக்களியுங்கள். சதியிலிருந்து மக்களின் கவனத்தைத் திசைதிருப்ப அரசியலமைப்பு, மூவர்ணக் கொடி ஆகியவற்றை இரு கட்சிகளும் பயன்படுத்துகின்றன. வாக்கு வங்கி அரசியலில் ஈடுபடும் இரு கட்சிகளை அமைதியாகவும் கோபமாகவும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர்" என்றார்.
இதையும் படிங்க: விஷத்தைப் பரப்பாதீர்கள், பாகிஸ்தானுக்கு செல்லுங்கள் - ஓவைஸியைத் தாக்கும் கிரிராஜ் சிங்