ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் பஞ்சனி என்ற பகுதி உள்ளது. இந்தப் பகுதியில் பசு மாடு ஒன்று மேய்ச்சலுக்கு வனத்துக்கு சென்றது.
இந்நிலையில் மாட்டின் வாய் பகுதி கிழிந்து தொங்கிய நிலையில், ரத்தம் சொட்ட சொட்ட திரும்பி வந்தது.
இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாட்டின் உரிமையாளர், இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்தப் புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இது குறித்த விசாரணை அலுவலர் கூறுகையில், “மாடு மேய்ச்சலுக்கு சென்ற இடத்தில் கிடந்த நாட்டு வெடிகுண்டை கடித்துள்ளது. அப்போது நாட்டு வெடிகுண்டு வெடித்துள்ளது. இதில் மாட்டின் வாய்ப் பகுதி கிழிந்துள்ளது.
இந்நிலையில் மாட்டுக்கு தற்போது மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்தச் செயலில் ஈடுபட்ட சமூக விரோதிகளை தேடிவருகிறோம்” என்றார்.
கேரளத்தில் மே மாதம் 27ஆம் தேதி பசியால் தவித்த சினை யானைக்கு பட்டாசுகளால் நிரப்பப்பட்ட பழத்தை சமூக விரோதிகள் கொடுத்தனர். இதைத் தின்ற அந்த யானை யாருக்கும் தொந்தரவு அளிக்காமல் அப்பகுதியிலிருந்த நதியில் இறங்கி உயிரை விட்டது நினைவுக் கூரத்தக்கது.
இதையும் படிங்க: நாட்டில், கடந்த 24 மணி நேரத்தில் 18,522 பேருக்கு கரோனா பாதிப்பு!