மும்பை: மகாராஷ்டிர மாநிலம் சந்திராபூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் 83 வயது ஹோமியோபதி மருத்துவர் ராமச்சந்திர தனகர். இவர் கடந்த 60 ஆண்டுகளாக அப்பகுதி மக்களுக்கு மருத்துவம் பார்த்துவருகிறார்.
மருத்துவமனைக்கு வர இயலாத நோயாளிகளுக்காகத் தன்னுடைய வெற்றுக் கால்களுடன் மிதிவண்டியில் நாள்தோறும் 10 கி.மீ. தொலைவில் பயணம் செய்து மருத்துவம் பார்த்துவருகிறார். கரோனா காலத்திலும், தன்னுடைய மருத்துவச் சேவை தடைபடக் கூடாது என்றெண்ணி, மருத்துவச் சேவைக்கு விடுப்பளிக்காமல் தொடர்கிறார் என்று பெருமிதம் தெரிவிக்கின்றனர் அப்பகுதி மக்கள்.
மக்களின் தேவையை உணர்ந்து, இந்தக் கரோனா சூழலில் நாள்தோறும் மிதிவண்டியில் பயணம்செய்து தேவையான மருந்துப் பொட்டலங்களை விநியோகித்துவருகிறார்.
இது குறித்து நம்மிடம் பேசிய மருத்துவர் ராமச்சந்திர தனகர், "கடந்த 60 ஆண்டுகளாக நான் நாள்தோறும் கிராமப்புற மக்களைச் சந்தித்து சிகிச்சையளிப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளேன்.
கரோனா வைரஸ் அச்சுறுத்தலால், பல மருத்துவர்கள் ஏழை மக்களுக்கு மருத்துவம் பார்ப்பதில் தயக்கமும், அச்சமும் காட்டுகின்றனர். இந்த இளைய தலைமுறை மருத்துவர்கள் சிகிச்சைக்கான கட்டணத்தைப் பெற்ற பிறகே மருத்துவம் பார்க்க முன்வருகின்றனர்.
ஆனால் மக்களைச் சந்திப்பதில் எனக்கென்றும் அச்சம் ஏற்படவில்லை. அதனால், நான் தைரியமாக மக்களைச் சந்திக்கிறேன்" என்றார்.