கேரளாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் தீவிரம் அடைந்துள்ளது. மக்கள் பலரும் மிகுந்த அச்சத்தில் உள்ளனர். நேற்று வரை 6 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 6 நபர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.
இதுகுறித்து நடைபெற்ற சிறப்பு அமைச்சரவை கூட்டத்தில், பல்வேறு முக்கியமான முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர் பினராயி விஜயன் கூறுகையில்,"கொரோனா வைரஸ் தீவிரமடைவதால் வரும் மார்ச் 31ஆம் தேதிவரை அனைத்து பள்ளிகளில் ஏழாம் வகுப்பு வரை விடுமுறை அளித்தும், அங்கன்வாடி, மதரஸாக்களையும் மூடுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. 8,9, மற்றும் 10ஆம் வகுப்புகளுக்கான பொது தேர்வுகள் ஏற்கனவே அறிவித்த தேதிகளில் நடைபெறும்" என்றார்.
மேலும் அவர் கூறுகையில், "மக்கள் தங்களது பயண விவரங்களை மறைத்தால் சட்டப்படி நடவடிக்கைகள் எடுக்கப்படும். வதந்திகள், போலி செய்திகளை பரப்பியவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மக்களின் பயனுக்காக சானிடைசர்கள் , முகமூடிகள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும் சினிமா தியேட்டர்களை வரும் 31ஆம் தேதி வரை மூட அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பொதுக்கூட்டம், சபரிமலை கோயிலுக்கு செல்வதை மக்கள் தற்காலிமாக குறைக்க வேண்டும்" என்றார்.
இதையும் படிங்க: கட்டுக்கடங்காத கொரோனா; 4,000 உயிர்கள் பலி