மத்திய மற்றும் வடகிழக்கு இந்தியாவில் நக்சல்களின் தாக்கத்தை ஒடுக்க பாதுகாப்பு படையினர் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், சத்தீஸ்கரில் தண்டேவாடா மாவட்டத்தில் 27 நக்சல்கள் காவல்துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.
காவல்துறையின் மறுவாழ்வு திட்டத்தினால் ஈர்க்கப்பட்டதாலும் மாவோயிஸ்ட் கொள்கையின் மீது நம்பிக்கை போனதாலும் சரணடைந்துள்ளதாக நக்சல்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஜூன் மாதம் முதல், மாவட்ட காவல்துறை விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறது. இந்த விழிப்புணர்வு பரப்புரையினால், மொத்தம் 177 நக்சல்கள் சரணடைந்துள்ளனர்.
இதுகுறித்து தண்டேவாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் கூறுகையில், "ஆறு பெண்கள் உள்பட 27 நக்சல்கள் சரணடைந்துள்ளனர். குப்பா கிராமத்திலிருந்து 11 பேர், பெட்மா கிராமத்திலிருந்து ஏழு பேர், மங்னா கிராமத்தில் இருந்து 5 பேர் சரணடைந்துள்ளனர். காவல்துறை மீது தாக்குதல் நடத்தியவர்களே தற்போது சரணடைந்துள்ளனர்" என்றார்.