இந்த பெருந்தொற்றுகாலத்தில் பல்வேறு போக்குவரத்துகளின் மூலம் ஊர் திரும்ப முயற்சித்தவர்களில் 170 பேர், குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்கு இயக்கப்பட்ட சிறப்பு ரயிலில் 81 பேர் என 251 பேர் சொந்த ஊர் திரும்பும் வழியில் இறந்துள்ளனர்.
"இடம்பெயர்ந்த தொழிலாளர்கள், வேலையின்மை, வீடில்லாதாது, பசி ஆகியவற்றிலிருந்து தப்பிக்க முயன்றபோது, சாலை விபத்துகள், காட்டுத் தீ, நிவாரண முகாம்களில் அலட்சியம் போன்றவற்றால் உயிரிழந்தனர்" என்று உரிமைகள் மற்றும் இடர் பகுப்பாய்வுக் குழு நடத்திய ஆய்வு தெரிவிக்கிறது. அதே நேரத்தில் குடிபெயர்ந்த தொழிலாளர்களுக்காக இயக்கப்பட்ட ரயில்கள் தண்ணீர், உணவு இல்லாத நரகமாக மாறிவிட்டன என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
மார்ச் 24 முதல் மே 31வரை இருந்த காலத்தை ஊரடங்கு காலமாக குறிப்பிட்டு நடத்தியுள்ள இந்த ஆய்வில், இந்திய அரசு அமல்படுத்திய ஊரடங்கு தோல்வியை தந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், “சிங்கப்பூரில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கும் இடங்களில் போதிய இடைவெளியை கடைப்பிடிக்க இயலாத நிலையில் அங்கு கரோனா தொற்று வேகமாகப் பரவியது. சிங்கப்பூரில் கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களில் 90 விழுக்காட்டிற்கு மேற்பட்டவர்கள் தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்க இயலாத தங்கும் இடங்களில் இருந்தவர்கள்தான். தாராவி போன்ற இடங்கள், சிங்கப்பூரிலுள்ள தங்கும் இடங்களைவிட மோசமானவை. எனவே, இது போன்ற இடங்களில் வைரஸ் தொற்று வேகமாகப் பரவும்" என்று அந்த ஆய்வு தெரிவிக்கிறது.
அந்த ஆய்வை நடத்திய உரிமைகள் மற்றும் இடர் பகுப்பாய்வுக் குழுவின் இயக்குனர் பேசுகையில், “இந்தியாவில் நிலைமை இன்னும் மோசமடையவில்லை. ஆனால், இந்திய அரசு எடுத்திருக்கிற நடவடிக்கை போதுமானதாக இல்லை. வாக்கு அரசியலை ஓரம் தள்ளிவிட்டு ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் இணைந்து உருப்படியான திட்டம் வகுத்து இந்த கரோனாவை எதிர்த்துப் போராடவேண்டும்” என்றார்.