சீனாவின் வூஹான் நகரில் தோன்றிய கோவிட்-19 (கொரோனா) தொற்று நோய் தற்போது உலகம் முழுவதம் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக, ஐரோப்பிய ஒன்றிய நாடான இத்தாலியில் இதன் பாதிப்பு அதிகமாக உள்ளது.
இந்நிலையில் அந்நாட்டு விமான நிலையம் ஒன்றில் சிக்கித்தவித்த 21 இந்தியர்கள் விமானம் மூலம் இன்று மீட்டு வரப்பட்டனர். கேரள மாநிலம் கொச்சியில் வந்திறங்கிய அவர்கள், ஆலுவா மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, பரிசோதிக்கப்பட்டு வருகின்றனர்.
இவர்களைப் போன்று இத்தாலி விமான நிலையங்களில் கர்ப்பிணிகள், குழந்தைகள் உட்பட 300க்கும் மேற்பட்ட இந்தியர்கள் எங்கும் செல்லமுடியாமல் தவித்து வருகின்றனர். தங்களை மீட்குமாறு அவர்கள் தொடர்ந்து இந்திய அரசை வலியுறுத்தி வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், "நாங்கள் எங்கே செல்வது?" எனக் கேள்வி எழுப்பினார். அந்த வீடியோவில் காணப்படும் மற்றொரு பெண்ணோ, "இத்தாலியில் பணிபுரிவதற்காக இங்கு வந்திருக்கிறோம். நாங்கள் வெளிநாட்டவர்கள். வீடு, உடமைகளை விட்டு வந்துவிட்டோம். நாங்கள் என்ன செய்வதென்று நீங்களே சொல்லுங்கள். கேரளாவுக்குச் செல்லாமல் வேறெங்கு செல்வோம்?" என உருக்கமாக கேள்வியெழுப்பியுள்ளார்.
இந்தியாவில் கோவிட்-19 வைரஸ் காரணமாக இதுவரை 84 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்; இரண்டு பேர் உயிரிழந்துள்னர்.
இதையும் படிங்க : இது இந்திய வணக்கமுங்க! - உலகத் தலைவர்களைக் கவரும் கலாசாரம்