ஹைதராபாத்: மகாராஷ்டிராவின் சந்திரபூர் மாவட்டத்தில் ஆனந்த்வான் என்ற சமூக மறுவாழ்வு மையம் உள்ளது. இது புகழ்பெற்ற சமூக சேவையாளரும், ரமோன் மகசேசே விருது பெற்றவருமான மறைந்த பாபா ஆம்தே என்பவரால் தொழுநோயாளிகளுக்காகவும், சமூகத்தின் நலிந்த பிரிவுகளில் இருந்த ஊனமுற்றோருக்காகவும் 1949இல் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பினரால் தொடங்கப்பட்ட கல்லூரி தான், ஆனந்த் நிகேதன் வேளாண் கல்லூரி.
பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எல்லா, ஆனந்த் நிகேதன் வேளாண் கல்லூரியின் பழைய மாணவர் ஆவார். இவர் 1973ஆம் ஆண்டில் விவசாயத்தில் பி.எஸ்சி படிப்பில் பயின்றார்.
இந்நிலையில், சமூக மறுவாழ்வு மையமான ஆனந்த்வானுக்கு பாரத் பயோடெக் தலைவரும், நிர்வாக இயக்குநருமான டாக்டர் கிருஷ்ணா எல்லா 4,000 டோஸ் கோவாக்சின் தடுப்பூசியை நன்கொடையாக அளித்துள்ளார்.
முன்னதாக, ஆனந்த்வான் மையத்துக்கு கரோனா தொற்றின் தாக்கம் குறித்து அறிந்த பின்னர் ஏற்கெனவே 2,000 டோஸ் தடுப்பூசியை அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனால், பாபா ஆம்தேவின் பேரன், கஸ்துபா அம்தே டாக்டர் கிருஷ்ணா எல்லாவுக்கு தனது நன்றியைத் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கடலுக்கு அடியில் மர்ம தீவு... ஆச்சரியத்தில் நிபுணர்கள்!