புதுடெல்லி: தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருடுப்போய் மீட்கப்பட்ட பழங்கால 10 சிலைகள் தமிழ்நாடு அரசிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டன. இந்தச் சிலைகளை மத்திய அமைச்சர் ஜி. கிரண் ரெட்டி தமிழ்நாடு அரசிடம் வழங்கினார். நடராஜர், சிவன் மற்றும் சில பெண் தெய்வங்களின் சிலைகளும் இதில் அடங்கியுள்ளன.

அரிய பொக்கிஷமான இந்தச் சிலைகள் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து திருடு போனது ஆகும். எனினும் இந்தச் சிலைகள் திருடு போன இடங்கள், கோவில்கள் குறித்த முழுமையான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. சிலைகள் பார்க்க ஐம்பொன் அல்லது செம்பினால் செய்யப்பட்ட செய்யப்பட்ட உலோக சிலைகள் போன்று காணப்படுகின்றன.

தமிழ்நாட்டில் நாயன்மார்கள் மற்றும் ஆழ்வார்களால் போற்றி பாடப்பட்ட பல்வேறு கோவில்கள் உள்ளன. இந்தக் கோவில்களில் பல அரிய சிற்பங்கள் மற்றும் சுவாமி சிலைகள் உள்ளன. இவற்றை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை அரசு எடுத்துவருகிறது. அந்த வகையில், கடந்த காலங்களில் திருடுபோன சிலைகள் தொடர்ந்து மீட்கப்பட்டுவருகின்றன.

கடந்த சில மாதங்களுக்கு ஆஸ்திரேலியின் புகழ்பெற்ற அருங்காட்சியகம் ஒன்றில் இருந்து சுவாமி சிலைகள் மீட்கப்பட்டன. முன்னதாக, மாமன்னர் ராஜராஜ சோழன் மற்றும் செம்பியன் மாதேவி சிலைகள் மீட்கப்பட்டு தமிழ்நாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது, அச்சிலைகளுக்கு மேள-தாளங்கள் முழங்க பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது நினைவு கூரத்தக்கது.

இதையும் படிங்க: பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் இடம்பெறவுள்ள காளி சிலை!