தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று (ஜனவரி 8) சிலர் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்தனர். சிறிது நேரத்துக்கு பின், அவர்களின் உடல்நிலை கடுமையாகப் பாதிக்கப்பட்டது. சிலர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்தனர். அவர்கள் அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இவர்களில் 55வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும், கள்ளச்சாராயம் குடித்த பெண்கள் உள்பட 143 பேருக்கு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் 17 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ளவர்களின் உடல் நிலை சீராக உள்ளது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
உயிரிழந்த நபர் கள்ளச்சாராயம் குடித்ததால் உயிரிழந்தாரா, இல்லை வேறு காரணமா என உடற்கூராய்வுக்கு பின்னரே தெரியவரும் எனவும் இயற்கைக்கு மாறான மரணம் என 174 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என காவலர் ஒருவர் தெரிவித்தார்.