திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், திருமழிசையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. விவசாயியான இவர் சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் செக்யூரிட்டி காலனி, பழைய பேங்க் ஆஃப் பரோடா சாலையில் அமைந்துள்ள வெங்கடாபுரம் கூட்டுறவு சங்கத்திற்கு லோன் வாங்குவதற்காகச் சென்று உள்ளார். அப்போது அந்த சங்கத்தின் செயலாளர் ஆறுமுகம் என்பவர் விவசாயி கிருஷ்ணமூர்த்தியிடம் லோன் வழங்குவதற்கு 40 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளதாகத் தெரிகிறது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி, திருவள்ளூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை விவசாயி கிருஷ்ணமூர்த்தியிடம் கொடுத்த நிலையில், இன்று அந்த ரசாயனம் தடவிய நோட்டுகளை ஆறுமுகத்தின் அலுவலகத்தில் இருந்த டம்ப்ளரில் இருப்பதை லஞ்ச ஒழிப்புத் துறை சோதனையில் வெளிவந்தது. இதனைத் தொடர்ந்து கையும் களவுமாக சிக்கிய கூட்டுறவு சங்கத்தின் செயலாளர் ஆறுமுகத்தை கைது செய்து, தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.