தஞ்சாவூர்: திருநெல்வேலியின் அச்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் செல்லத்துரை (57). இவர் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், கடந்த செப்.16-ம் தேதி மாலை 3.30 மணியளவில், பள்ளியில் உள்ள வகுப்பறையில் மாணவிகளுக்கு சமூக அறிவியல் பாடம் நடத்திக் கொண்டிருந்தவர், திடீரென மயங்கி விழுந்துள்ளார்.
இதனையடுத்து, பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் இறந்துவிட்ட தகவலை தெரிவித்தனர். மேலும், இது குறித்து அவருடைய மகன் ராகேஷ் பட்டுகோட்டை நகர போலீஸில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். மேலும், அவரது உடலை பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று பிரேதப் பரிசோதனை செய்து வெளியில் வந்தபோது, ஆசிரியர்கள், மாணவிகள், அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர், அவரது உடலை சொந்த ஊரான திருநெல்வேலிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர்.