திருநெல்வேலி: தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில், நெல்லை மாவட்டம் வள்ளியூர், நாங்குநேரி பகுதிகளிலும் கடந்த 2 நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால், களக்காடு தலையணையில் வெள்ளம் அதிகரித்து காணப்படுகிறது.
தற்போது, இன்று காலை முதல் தலையணையில் வெள்ளத்தின் அளவு அதிகரித்துக் காணப்படுவதால், களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக வனத்துறையினர் தலையணை அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு தடை விதித்துள்ளனர். மேலும், தலையணையைப் பார்வையிட மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், வெள்ளம் குறைந்ததும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்படும் எனவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.