அரியலூர்: அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகே விக்கிரவாண்டி - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து கும்பகோணம் நோக்கி அரசுப் பேருந்து ஒன்று விரைந்து வந்து கொண்டிருந்துள்ளது. அப்போது திருவாரூர் மாவட்டம், ஆலங்குடி பகுதியில் வசிக்கும் குரு பிரசாத் என்பவர், தனது காரில் வேலூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளார்.
அப்போது, ஜெயங்கொண்டத்தை அடுத்த மீன்சுருட்டி கடைவீதி அருகேயுள்ள வேகத்தடையில் வந்தபோது, காரை ஓட்டி வந்த குரு பிரசாத் பிரேக் பிடித்ததாக சொல்லப்படுகிறது. அப்போது பின்னால் வந்த அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து, முன்னே சென்ற கார் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணம் செய்த குரு பிரசாத் உள்ளிட்ட மூன்று பேர் அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பியுள்ளனர். இச்சம்பவம் குறித்து மீன்சுருட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து சிறிது நேரம் பாதிக்கப்பட்டது.