சென்னை: கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். அந்த வகையில், ஆறு மாடி கொண்ட பழைய கட்டடத்தின் இரண்டாவது தளத்தில் இன்று திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தால், உள்நோயாளிகள் இருக்கக்கூடிய வார்டு பகுதியில் கரும்புகை சூழ்ந்து, மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும், இந்த விபத்து தொடர்பாக உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
தகவலின் பேரில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து நோயாளிகள் இருக்கக்கூடிய அறைகளில் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்து உள்பகுதியில் இருக்கக்கூடிய கரும்புகையை வெளியேறச் செய்தனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. மேலும், தீ விபத்திற்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.