மும்பை: சென்னையில் இருந்து மும்பைக்கு இண்டிகோ நிறுவனத்தின் விமான சேவை இயக்கப்பட்டு வருகிறது. வழக்கம் போல் இன்று (ஜூன்.1) சென்னையில் இருந்து இண்டிகோ நிறுவனத்தின் விமானம் 172 பயணிகளுடன் மும்பை புறப்பட்டுச் சென்றது. இந்நிலையில், திடீரென விமானத்திற்கு மர்மநபர்கள் வெடிகுண்டு மிரட்டல்விடுத்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, இண்டிகோ விமானி மும்பை விமான நிலையத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் அளித்து உள்ளார். அதைத் தொடர்ந்து மும்பை விமான நிலையத்தில் காலை 8.45 மணிக்கு விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது. உடனடியாக விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர்.
தொடர்ந்து விமானம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு முழு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் யார் என தெரியவராத நிலையில், அதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். முன்னதாக கடந்த மே 28ஆம் தேதி டெல்லியில் இருந்து வாரணாசி நோக்கி சென்ற இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.