முழுநேர விவசாயியாக மாறிய முன்னாள் அமைச்சர்.. மூட்டை தூக்கிய வீடியோ வைரல்! - Puducherry congress ex minister - PUDUCHERRY CONGRESS EX MINISTER
🎬 Watch Now: Feature Video
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/27-04-2024/640-480-21327002-thumbnail-16x9-pud.jpg)
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg)
Published : Apr 27, 2024, 10:55 AM IST
புதுச்சேரி: காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு தொகுதியைச் சேர்ந்தவர் முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன். விவசாயத்தை பூர்வீக தொழிலாகக் கொண்ட இவர், அம்பகரத்தூர், நல்லம்பல் பகுதியில் உள்ள இவரின் விவசாய நிலத்தில் நெல், உளுந்து பயிரிட்டு வருகிறார். இந்நிலையில், இவர் கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் சார்பில் திருநள்ளாறு தொகுதியில் வெற்றி பெற்று, காங்கிரஸ் ஆட்சியில் வேளாண்துறை அமைச்சராக இருந்தார்.
அதைத் தொடர்ந்து, கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் தோல்வியுற்றதால், அரசு அலுவலகங்களில் கோப்புகளுடன் பிசியாக இருந்த அமைச்சர், அதன் பிறகு விவசாயப் பணியில் மூழ்கி விட்டார். அந்த வகையில், தற்போது இவர் தனது விவசாய நிலத்தில் நெல் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு, அம்பகரத்தூர் சின்ன கடை தெருவில் உள்ள தனியார் கடைக்கு லுங்கி, பனியன் அணிந்து டிராக்டரில் வந்த முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன், தனது விவசாய கூலி தொழிலாளிகளுடன் நெல் மூட்டைகளை சர்வ சாதாரணமாக தலையில் சுமந்து, கடையில் இறக்கி வைக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், இந்த வேலையை செய்தால் தான் சாப்பாட்டுக்கு அரிசி கிடைக்கும் எனவும், எதிரில் நின்ற காய்கறி பயிரிடும் விவசாயியைக் கை காட்டி, அவர் காய்கறி பறிக்கவில்லை என்றால் குழம்பு வைக்க முடியுமா? என முன்னாள் அமைச்சர் கமலக்கண்ணன் கேள்வி கேட்பதும் பதிவாகியுள்ளது.