காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு.. ஒகேனக்கல் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி! - Hogenakkal falls
![ETV Bharat Tamil Nadu Team](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/authors/tamilnadu-1716535724.jpeg?imwidth=128)
Published : Jul 9, 2024, 1:44 PM IST
![ETV Thumbnail thumbnail](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/09-07-2024/640-480-21903863-thumbnail-16x9-dpii.jpg)
தருமபுரி: தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல் அருவி தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக உள்ளது. தென்னிந்தியாவின் நயாகரா என்றும் அழைக்கப்படும் இந்த அருவிக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து அருவிகளில் உற்சாக குளியல்போடுவது வழக்கம்.
கர்நாடக மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக கபினி அணை மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், இரு அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகின்றன.
இதன் காரணமாக காவிரியில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் விநாடிக்கு 4 ஆயிரம் கன அடி நீர் வந்த நிலையில் அது நேற்று ஐந்தாயிரம் கன அடியாக அதிகரித்திருந்தது. இன்று மேலும் ஆயிரம் கனஅடி அதிகரித்து இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடி நீர் வருகிறது.
இதனால் ஒகேனக்கல் மெயின் அருவி, சினி அருவி பகுதிகள் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.