ஓடும் ரயிலிலிருந்து இறங்க முயன்று தவறி விழுந்த பயணி.. நொடிப்பொழுதில் காப்பாற்றிய காவலர்! - man falling of train - MAN FALLING OF TRAIN
🎬 Watch Now: Feature Video


Published : Apr 16, 2024, 3:10 PM IST
மயிலாடுதுறை: ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பயணி தவறி கீழே விழுந்த நிலையில், ரயில்வே பாதுகாப்புப் படை காவலர் துரிதமாகச் செயல்பட்டு பயணியைக் காப்பாற்றும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
சென்னையில் இருந்து மன்னார்குடி செல்லக்கூடிய மன்னாய் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று (ஏப்ரல் 15) இரவு புறப்பட்டு இன்று அதிகாலை 4.30 மணி அளவில் மயிலாடுதுறை ரயில்வே நிலையத்திற்கு வந்துள்ளது. அங்கு பயணிகளை இறக்கி விட்டு ரயில் கிளம்பிய நிலையில், இருவர் ரயிலிலிருந்து இறங்க முயற்சித்துள்ளனர்
அதில் ஒருவர் ரயிலில் இருந்து இறங்கிய நிலையில், மற்றொருவர் இறங்கும்போது தவறுதலாக ரயிலில் இருந்து கீழே விழுந்தார். ரயில் சென்று கொண்டு இருந்த நிலையில், அதிலிருந்து தவறி விழுந்தவரைப் பார்த்த ரயில்வே பாதுகாப்புப் படை முதல்நிலை காவலர் புருஷோத்தமன், துரிதமாகச் செயல்பட்டு அவரை நடைமேடைக்கு இழுத்துக் காப்பாற்றினார்.
இந்த காட்சிகள் ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் வெளியாகி வேகமாகப் பரவி வருகிறது. நொடிப்பொழுதில் பயணியின் உயிரைக் காப்பாற்றிய காவலருக்குப் பலரும் பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.