Published : Aug 23, 2024, 9:58 AM IST
"தீபாவளிக்கு ரூ.5000 தரணும் இல்லனா பெட்ரோல் ஊத்தி கொளுத்திடுவேன்" - குட்டி தாதாவை தட்டி தூக்கிய போலீஸ்! - CHENNAI Rowdy video
சென்னை: திருமங்கலம் பிரதான சாலையில் இயங்கி வரும் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கடந்த செவ்வாய்கிழமை, கஞ்சா போதையில் கடைக்குள் புகுந்த ரவுடி விக்கி என்பவர், மாமூல் கேட்டு மிரட்டும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பான அந்த வீடியோவில் சரித்திர பதிவேடு குற்றவாளியான விக்கி என்பவர், கையில் பெரிய கட்டையுடன் சூப்பர் மார்க்கெட்டிற்குள் நுழைகிறார்.
பின்னர் கடை உரிமையாளர் மாரியப்பனிடம், 'தீபாவளி நெருங்கி வருவதால் தனக்கு 5000 ரூபாய் மாமுல் தரவேண்டும், தர மறுத்தால் பெட்ரோல் ஊற்றி கடையை எரித்து விடுவேன் எனவும், கடையில் உள்ள லேப்டாப்புகள் அனைத்தையும் சிதறவிட்டுருவேன் என மிரட்டியுள்ளார்.
இதனைக் கடையில் உள்ள ஊழியர் ஒருவர் வீடியோவாக பதிவு செய்துள்ளார். மேலும் இந்த வீடியோவை வணிகர் சங்கத்தில் ஒப்படைத்து அதன் மூலம் நடவடிக்கை எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை கடை நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் தரப்படவில்லை.
இதற்கிடையே மாமூல் கேட்டு மிரட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. இதனையடுத்து வீடியோ காட்சிகள் அடிப்படையில் ரவுடி விக்கியை, திருமங்கலம் போலீசார் பிடித்து விசாரணை செய்து வருகின்றனர்.