மேகமலை அருவியில் திடீர் வெள்ளப்பெருக்கு.. வனத்துறையினரின் துரித நடவடிக்கையால் அசம்பாவிதம் தவிர்ப்பு! - Megamalai flood - MEGAMALAI FLOOD
🎬 Watch Now: Feature Video


Published : May 15, 2024, 3:19 PM IST
தேனி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி தாலுகா கோம்பைத்தொழு அருகே உள்ள வனப்பகுதியில் மேகமலை அருவி அமைந்துள்ளது. இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் இருந்து ஒரு கிலோமீட்டர் தூரம் முன்பாக உள்ள சோதனைச்சாவடி அருகிலேயே வாகனங்களை நிறுத்தி விட்டு, அருவிக்கு நடந்து சென்று குளித்து விட்டு வருவது வழக்கம்.
இந்நிலையில், நேற்று மாலை 6 மணி அளவில் 20க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளித்து விட்டு வனத்துறை சோதனைச்சாவடி அருகே உள்ள தரைப்பாலத்தில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளனர். அப்போது திடீரென மலைப் பகுதிகளில் கொட்டிய கனமழையால் அருவியில் தண்ணீர் வரத்து பல மடங்கு அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் சோதனைச் சாவடிக்கு முன்பாக இருந்த தரைப்பாலம் முற்றிலும் நீர் உருண்டோடி உள்ளது. தண்ணீர் அதிகமாக வரப்போவதை முன்பாகவே அறிந்த பாதுகாப்பில் இருந்த வனத்துறை அதிகாரிகள், பத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளை பாலத்தில் இருந்து பாதுகாப்பாக பாலத்திற்கு மேல் பகுதியில் போகச் செய்து அங்கேயே காத்திருக்க வைத்தனர்.
அதில் வந்த மீதி பத்துக்கும் மேற்பட்டோர் சோதனைச் சாவடியில் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டனர்.
இதையடுத்து, ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் தண்ணீர் வரத்து சற்று குறைந்த பின்னர், பாதுகாப்பாக பாலத்தைக் கடந்து செல்ல வைத்து சுற்றுலாப் பயணிகளை வனத்துறையினர் வீடுகளுக்கு அனுப்பி வைத்தனர்.