'பத்ரி' பட பாணியில் கைவிரல்களில் 15 முறை ஏறி இறங்கிய கார்கள்; சாதனைப் படைத்த 16 வயது மாணவி!
Published : 4 hours ago
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த ராஜேந்திரன், அன்பரசி தம்பதியரின் மகள் சுசி ஷாலினி (வயது 16). இவர் பட்டுக்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வரும் நிலையில், மாணவி சுசி கடந்த சில ஆண்டுகளாக தனது சகோதரரும், கராத்தே மாஸ்டருமான சென்சாயா ஸ்டாலினிடம் கராத்தே பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில் 2 டன் எடைக்கொண்ட கார், ஜீப் போன்ற 4 சக்கர வாகனங்களை தொடர்ச்சியாக 15 முறை தனது கைவிரல்களில் ஏற்றி உலக சாதனை படைக்க முயற்சி மேற்கொண்டார். இதற்கான நிகழ்ச்சி நேற்று அதிராம்பட்டினம் பஸ் நிலையத்தில் நடைபெற்றது. தொடர்ச்சியாக 15 முறை மாணவி சுசி ஷாலினி தனது விரல்களில் கார், ஜீப் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்கள் ஏறி இறங்கியதை ஏராளமான மக்கள் கண்டு வியந்தனர். உலக சாதனை முயற்சிக்காக துணிச்சலுடன் களமிறங்கிய அவரை, கராத்தே மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் உற்சாகப்படுத்தினர்.
இதுகுறித்து மாணவி சுசி ஷாலினி கூறுகையில், “எதையாவது சாதிக்க வேண்டும் என்று கராத்தே பயிற்சி மேற்கொண்டேன். உலக சாதனை முயற்சியாக எனது கைவிரல்களில் 4 சக்கர வாகனங்களை தொடர்ச்சியாக 15 முறை ஏற்றி உள்ளேன். இதற்கு முன்பு கடந்தாண்டு எனது வயிற்றில் மரப்பலகை வைத்து 67 முறை இருசக்கர வாகனத்தை ஏற்றி சாதனை படைத்தேன்” என்று கூறினார்.