நெல்லையில் மதுவை ஒழிக்க தனி ஆளாக போராட்டத்தில் குதித்த நபரால் பரபரப்பு! - liquor ban protest in nellai
Published : Jul 16, 2024, 4:54 PM IST
திருநெல்வேலி: நெல்லை சந்திப்பு ரயில் நிலையம் முன்பு காமராஜர் சிலை அமைந்துள்ளது. நேற்றைய தினம் காமராஜர் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்ட சூழலில், அப்பகுதியில் பிரமாண்டமான அலங்கார வளைவுகள் மற்றும் மேடைகள் அமைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மேடை முன்பு, இன்று திடீரென கருப்பு உடை அணிந்த நபர் ஒருவர் கையில் மதுவை ஒழிப்போம் என வலியுறுத்தி தமிழ், ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட மொழிகள் மூலம் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு பதாகை ஒன்றை ஏந்தி, முட்டி போட்டுக்கொண்டு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் ரயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.
இதனைத் தொடர்ந்து அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தியதாக நெல்லை சந்திப்பு போலீசார் அவரை கைது செய்து அழைத்துச் சென்றனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், போராட்டத்தில் ஈடுபட்ட நபர் நெல்லை மாவட்டம் குறிச்சி குளம் பகுதியைச் சேர்ந்த யோவான் என்பதும், இவர் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள தனியார் உணவகத்தில் பணிபுரிகிறார் என்பதும் தெரியவந்துள்ளது. மது போதையால் பல குடும்பங்கள் அழிவதை பொறுக்க முடியாமல் இந்த போராட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் அவர் தெரிவித்துள்ளார்.