நெல்லை: வள்ளியூர் பேரூராட்சியின் 7வது வார்டு கவுன்சிலராக சுதா உள்ளார். திமுகவைச் சேர்ந்த இவரது கணவர் சுரேஷ் பாக்கியம், கடந்த ஆண்டு மார்ச் மாதம் உயர் ரக சொகுசு கார் வாங்கியுள்ளார். அதனை தற்காலிக பதிவு செய்த நிலையில், கடந்த மாதம் நிரந்தர பதிவிற்காக வள்ளியூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். பின்னர் தாமதக் கட்டணம், ஆயுட்கால வரி உள்ளிட்டவைகளுக்காக உரிய கட்டணத்தை செலுத்தி அதற்கான ரசீதையும் பெற்றுள்ளார்.
ஆனால் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக உள்ள பெருமாள் என்பவர் 20,000 ரூபாய் தந்தால் மட்டுமே வாகனத்தை பதிவு செய்ய முடியும் என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சுரேஷ் பாக்கியத்திற்கு ஆதரவாக வள்ளியூர் பேரூராட்சியின் 1-வது வார்டு உறுப்பினர் லாரன்ஸ், மோட்டார் வாகன ஆய்வாளரிடம் தொலைபேசியில் பேசியுள்ளார்.
அப்போது மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள், "மற்ற நபர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வாங்குவேன், நீ வந்ததால் 20000 ரூபாய்க்கு சம்மதிக்கிறேன். திருநெல்வேலியில் உள்ள மோட்டார வாகன ஆய்வாளர் பிரபாகரனிடம் சென்றால் 50 ஆயிரம் ரூபாய் கேட்பான். நாற்பது லட்சம் ரூபாய்க்கு கார் வாங்க முடிகிறது, 20 ஆயிரம் கொடுக்க முடியாதா?" என பேசும் ஆடியோ வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக விசாரித்த போது சுரேஷ் பாக்கியம், மோட்டார் வாகன ஆய்வாளர் லஞ்சம் கேட்டது தொடர்பாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையில் புகார் அளித்துள்ளார். அதில் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்ட நிலையில், அவ்வளவு தர முடியாது என கூறியதால் 15 ஆயிரம் ரூபாய்க்கு சம்மதித்ததாகவும், தெரிவித்துள்ளார். உடனடியாக ஒரு வங்கிக் கணக்கில் பணத்தை செலுத்த கூறிய நிலையில் என்னிடம் 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்ததால் அதனை மோட்டார் வாகன ஆய்வாளர் கூறிய வங்கி கணக்கில் செலுத்தி விட்டேன்.
ரூ.5 ஆயிரத்தை மறுநாள் தருவதாக தெரிவித்தேன். ஆனால் "ரூ.5 ஆயிரத்தை வங்கி கணக்கில் செலுத்தி விட்டு வாகனத்தை கொண்டு வா, பதிவு செய்து தருகிறேன்" எனக் கூறி ஆய்வாளர் திருப்பி அனுப்பி விட்டார் என தெரிவித்துள்ளார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு சுரேஷ் பாக்கியத்தின் புகாரில் உண்மை தன்மை இருப்பதை அறிந்து மோட்டார் வாகன ஆய்வாளர் பெருமாள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்.
இதையும் படிங்க: நெல்லை அரசு மருத்துவமனையில் சிறுவன் மரணம்; தவறான ஊசி போட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு!
இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது வரை மோட்டார் வாகன ஆய்வாளர் மீது துறைரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. திமுக பிரமுகருக்கு வாகனப் பதிவும் செய்தும் கொடுக்கப்படவில்லை.