சேலம்: சேலம் மாவட்டம் கெங்கவல்லி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட தம்மம்பட்டி அடுத்த மண்மலை ஊராட்சியில் இருக்கிறது மொடக்குப்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் தனியார் பூச்சிக்கொல்லி மருந்து ஆலை ஒன்று அமைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, அப்பகுதி மக்கள் இந்த பூச்சிக்கொல்லி தொழிற்சாலையால் விவசாயம் பாதிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர் நஞ்சாகுவதாகவும், சுற்றுச்சூழல் மிகவும் மோசமடைவதாகவும் கூறி பூச்சிக்கொல்லி மருந்து ஆலையை அகற்ற வலியுறுத்தி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வழங்கினர்.
அதனைத் தொடர்ந்து நடைபெற்ற 10 கிராம சபை கூட்டத்திலும், பூச்சிக்கொல்லி தயாரிப்பு ஆலையை நிரந்தரமாக மூடிட வலியுறுத்தி அதனை தீர்மானமாகவும் நிறைவேற்றினர். ஆனால், அரசு தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதன் பின்னர் மொடக்குப்பட்டி கிராம மக்கள் தங்களது கிராமத்தில், தம்மம்பட்டி பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு கட்ட போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: இரத்த சோகையில் இருந்து மீண்ட கர்ப்பிணிக்கு வளைகாப்பு நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்திய அரசு மருத்துவமனை!
இருப்பினும், பூச்சிக்கொல்லி தயாரிப்பு ஆலையை மூடி மாவட்ட நிர்வாகம் தரப்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால், அதிருப்தி அடைந்த மொடக்குப்பட்டி கிராம மக்கள் நேற்று (புதன்கிழமை) கருப்பு கொடி ஏற்றி, தேர்தலை புறக்கணிப்பதாக கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது. வீடுகள், தென்னை மரங்கள் உட்பட கிராமத்தில் பல இடங்களில் கருப்பு கொடியேற்றினர். மேலும், மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அளித்த அனுமதியையும் ரத்து செய்து ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், கண்டன முழக்கங்களையும் எழுப்பினர்.
இது குறித்து மொடக்குப்பட்டி கிராம மக்கள் கூறுகையில், "எங்கள் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் எங்கள் கிராமத்தில் இருந்து ஒரு வாக்கு கூட பதிவாகாது" என உறுதியாக தெரிவித்தனர்.
இதையும் படிங்க: "சமூக ஊடகங்களில் உள்ள நேரலை மூலம் இரவு 10 மணிக்கு பிறகு பரப்புரை மேற்கொள்வதைக் கண்காணிக்கிறோம்" - சத்ய பிரதா சாகு!