சென்னை: பிரதமர் மோடி குறித்து வேல்முருகன் எம்எல்ஏ பேசிய சில வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி) புதிய திருத்தப்பட்ட வரைவுக்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் இன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. முதல்வர் முன்மொழிந்த இத்தீர்மானத்தின் மீது பல்வேறு கட்சிகளின் எம்எல்ஏக்கள் அவையில் பேசினர்.
தமிழக வாழ்வுரிமை கட்சியின் எம்எல்ஏ வேல்முருகன் பேசுகையில், பிரதமர் மோடியை சில சர்வாதிகார தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசினார்.
இதையடுத்து பேசிய பாஜக சட்டமன்றக் குழுத் தலைவர் நயினார் நாகேந்திரன்,'யுஜிசி குறித்து பேசுவதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பேசும் வார்த்தை முக்கியம். நாட்டின் பிரதமரை இப்படி சர்வாதிகார தலைவர்களுடன் ஒப்பிட்டு பேசலாமா?
நீங்கள்(சபாநாயகர்) கேட்பீர்கள் என நினைத்தேன்; கேட்டு கேட்காமல் இருக்கிறீர்கள். யுஜிசி திருத்தம் குறித்து பேசப்படும்போது வார்த்தைகளை எப்படி பேச வேண்டும் என்று இருக்கிறது. ஆனால் சர்வாதிகாரம் என்றெல்லாம் பேசுவதை நீங்கள் கண்டிப்பீர்கள் என நினைத்தேன்.மாநில உரிமை பறிக்கும் வகையில் இருந்தால் சுட்டிக்காட்டலாம் தவறு இல்லை. ஆனால் வார்த்தைகளை பார்த்து பயன்படுத்த வேண்டும்." என்று நயினார் நாகேந்திரன் பேசினார்.
இதையடுத்து பேசிய சபாநாயகர் அப்பாவு ,"யுஜிசி திணிப்பதை தான் அவர்(வேல்முருகன்) கூறினார். அன்பார்லிமென்ட் வார்த்தை ஏதும் பயன்படுத்த வில்லை" என்றார்.
அப்போது குறுக்கிட்ட முதல்வர் ஸ்டாலின், "அவர்(வேல்முருகன்) பேசியது தவறாக இருந்தால் திருத்திக்கொள்ளலாம்.இந்த தீர்மானத்தை ஆதரிக்கின்றீர்களா, இல்லையா?" என கேட்டார்.
இதற்கு பதில் அளித்த நயினார் நாகேந்திரன், "சில திருத்தங்களை கொண்டு வந்துள்ளார்கள். மேலை நாடுகளில் படிக்கும் மாணவர்களுடன் போட்டியிடும் அளவிற்கு கல்வியில் மாற்றம் வேண்டும். சில குறைகள் இருந்தால் அதை சொல்லி மாற்றம் செய்யலாம். முதல்வர் குறைகளை எடுத்து சொல்லி கடிதம் எழுதலாம். இவை இறுதியான நடவடிக்கை இல்லை வரைவு அறிக்கை தான்.
'முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களே ஆளுநருக்கு அதிகாரம் அதிகரிக்க வேண்டும்' என கூறியிருந்தார். எனவே, முதல்வரின் தனித்தீர்மானத்தை ஏற்க முடியாது; வெளிநடப்பு செய்கின்றோம்" என்றார்.
இதற்கு பதில் அளித்த அமைச்சர் துரைமுருகன், "கலைஞர் அப்படி கூறியிருப்பதாக தெரியவில்லை. ஆளுநர் பதவி இருக்கக்கூடாது என்பது எங்கள் கருத்து;இருக்கும் வரை அவர்களுக்கு மதிப்பு தர வேண்டும்." என்று எடுத்துரைத்தார்.
தொடர்ந்த பேசிய சபாநாயகர் அப்பாவு, "முன்னாள் ஆளுநர் ஒருவர் மீது அவதூறு பரப்பப்பட்ட நிலையில் கலைஞர் அவ்வாறு கூறினார் என்பது என் நினைவு; அது உறுதியாக தெரியவில்லை." என்று கூறினார்.
அதனை தொடர்ந்து,"முதல்வர் கூறியதை அடுத்து, சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன் பேசிய ஒரு சில வார்த்தைகள் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுகிறது." என்று தெரிவித்தார்.