கிருஷ்ணகிரி: தமிழ்நாடு முழுவதும் நாளை (ஏப்.19) நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக கோபிநாத் போட்டியிடுகிறார்.
இந்த நிலையில், இன்று (ஏப்.18) கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட ச்செயலாளர் செல்வம், கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி திமுக மேலிட பொறுப்பாளரான இளங்கோவனிடம் செல்போனில் பேசியதாக கூறப்படுகிறது.
அப்போது இளங்கோவன், செல்வத்திடம் "கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியே இல்லை" என கூறியதாக சொல்லப்படுகிறது. இதனால் கோபமடைந்த செல்வம், இளங்கோவனிடம் வாகுவாதத்தில் ஈடுபட்டதாகவும் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து அவமதிப்பு செய்து வருவதாகக் கூறி, திமுக மாவட்டச் செயலாளர் ஒய்.பிரகாஷ் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளர் இளங்கோவன் ஆகியோரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஓசூரில் உள்ள கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் கோபிநாத்தின் வீட்டை முற்றுகையிட்டனர்.
இந்த விவகாரம் குறித்து கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட விசிக செயலாளர் செல்வம் கூறுகையில், "கிருஷ்ணகிரி மாவட்ட திமுக செயலாளர் ஒய்.பிரகாஷ் மற்றும் கிருஷ்ணகிரி நாடாளுமன்றத் தொகுதி திமுக பொறுப்பாளர் இளங்கோவன் ஆகியோர் விடுதலை சிறுத்தைகள் கட்சியைத் தொடர்ந்து அவமதிப்பு செய்து வருகின்றனர்.
ஆகவே, கட்சி மேலிடம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால், நாங்கள் விசிக பொறுப்பாளர்களிடம் பேசி நாளை நடைபெறும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டுமா வேண்டாமா என்று முடிவை அறிவிப்போம்" என தெரிவித்தார்.
இதையும் படிங்க: ஈழத்தமிழ்ப் பெண்ணுக்கு வாக்குரிமையா? - திருச்சி ஆட்சியர் கூறிய விளக்கம் என்ன?