சென்னை: இலங்கையில் இனப்படுகொலை செய்யப்பட்ட ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்வு, சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்றது. மே 17 இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்த நினைவேந்தலில் ஏராளாமானோர் மெழுகுவர்த்தி ஏந்தி பங்கேற்றனர்.
இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணை ஆணையம் அமைக்கவும், தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும் இந்த நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது. பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனின் உருவப்படம் பெசன்ட் நகர் கடற்கரை மணலில் மலர்கள் சூழ அலங்கரிக்கப்பட்டிருந்தது.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, விசிக துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசு, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் பாலச்சந்திரன் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். இதன் பின்னர் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி செய்தியாளர்களிடம் பேசுகையில், “இலங்கை அரசு மீது உடனடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இல்லையென்றால் பாலஸ்தீனத்தில் நடைபெறுகின்ற இனப்படுகொலை போல உலகெங்கும் நடக்கும்.
இலங்கை அரசு இனப்படுகொலை குற்றம் புரிந்ததற்கான பல்வேறு ஆவணங்கள் இன்றளவும் வந்து கொண்டிருக்கின்றன. நான்கு மாதங்களுக்கு முன்பு கூட இலங்கையில் மனித புதை குழிகள் மூலம் கொத்து கொத்தாக தமிழர்களின் பிணங்கள் கண்டெடுக்கப்பட்டன.
ஐநாவின் நிபுணர் குழு ஈழத்தில் நடைபெற்ற இனப்படுகொலையை ஆவணப்படுத்தி உள்ளது.இனப்படுகொலைக்கான சர்வதேச சுதந்திர விசாரணையை கொண்டுவர வேண்டும், மேலும் சுதந்திர தமிழீழத்திற்கான பொது வாக்ககெடுப்பு நடத்தப்பட வேண்டும்” என்று திருமுருகன் காந்தி வலியுறுத்தினார்.
இதனைதொடர்ந்து நினைவேந்தல் தீப்பந்தத்தை ஏற்றி வைத்த வைகோ செய்தியாளர்களிடம் பேசுகையில், “ஈழப்போரின் போது கொல்லப்பட்ட தமிழர்களின் நினைவுபடுத்தி தான் இங்கு தீபங்கள் ஏற்றப்பட்டன. சுதந்திர தமிழ் ஈழம் மட்டுமே இந்த பிரச்சனைக்கு தீர்வாகும். தமிழீழத்தை சுதந்திர நாடாக அறிவிக்க வேண்டும்.
மேலும் குற்றத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கையாக உள்ளன. தனி ஈழத்திற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். ஹிட்லர் கொலை தான் செய்தார். ஆனால் ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான பெண்கள் வன்கொடுமை செய்யப்பட்டார்கள்.
இனப்படுகொலையை நடத்தியவர் இன்றும் சுதந்திரமாக இருக்கிறார். இந்திய அரசின் உதவியை பெற்றுக் கொண்டு சிங்களவர் தமிழர்களை அழித்தார். இந்த நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்த அனுமதி அளித்த தமிழ்நாடு அரசுக்கும் காவல் துறைக்கும் எனது நன்றி” என்றார்.
இதையும் படிங்க: குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி பூங்கா.. இஸ்ரோ முன்னாள் தலைவர் சிவன் கொடுத்த அப்டேட்! - ISRO Former Chairman Sivan